Loading...
Saturday 15 February 2014

ரசிகர்கள் போ என்று சொல்வதற்கு முன்பே, நாம் சென்று விடவேண்டும்! -இசையமைப்பாளர் மரகதமணி..




இந்தியில் வித்யாபாலன்நடித்த கஹானி படம் தெலுங்கில் அனாமிகா, தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயர்களில் ரீமேக் ஆகியுள்ளன. விரைவில் திரைக்கு வரவிருக்கும் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் இயக்குனர் சேகர் முல்லா, இசையமைப்பாளர் மரகதமணி, நடிகர் வைபவ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

விழாவில் பேசிய டைரக்டர் சேகர் முல்லா பேசுகையில், கஹானியில் காணாமல் போன கணவரை தேடிவரும் வித்யாபாலன் கர்ப்பிணியாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் நயன்தாரா கர்ப்பிணி இல்லை. ஒரே மாதிரியாக இருக்க வேண்டாமே என்று இதுபோன்ற சில மாற்றங்களை செய்திருக்கிறேன் என்றார்.

கர்ப்பிணி என்றால்தானே ஒரு சிம்பத்தி இருக்கும்? ஆனால் இந்த படத்தில் அது இருக்காதே? என்று அவரிடம் கேட்டபோது, கஹானி இந்தியா முழுக்க ஓடிய படம். பெருவாரியான ரசிகர்கள் பார்த்து விட்டனர். அதனால் விஷயம் ஒன்று என்றாலும் அதை வேறு மாதிரியாக சொல்லும்போதுதான் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி இல்லாத ஒரு பெண் கணவரை தேடி வருவது போன்று காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதேசமயம் இந்த படத்திலும் சிம்பத்தி இருக்கும்.

இது நயன்தாராவுக்கு முக்கியமான படம்? ஆனால் அவர் ப்ரமோஷனுக்கு வராதது ஏன்? என்றதற்கு, அவர் வேறு படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அதனால் வரமுடியவில்லை. ஆனால், இந்த படத்துக்காக அடுத்தடுத்து நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வதாக கூறியிருக்கிறார்.

அவரையடுத்து இசையமைப்பாளர் மரகதமணி பேசுகையில், வானமே எல்லை என்ற படத்தில் கே.பாலசந்தர்தான் என்னை மரகதமணி என்ற பெயரில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு தமிழில் சில படஙக்ளில் இசையமைத்த நான், தெலுங்கில் கீரவாணி என்ற பெயரில் பிசியாகி விட்டேன். பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது நீ எங்கே என் அன்பே படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன் என்றார்.

அப்போது அவரிடத்தில், சமீபத்தில் 2016ல் சினிமாவில் இருந்து ரிட்டயர்டு ஆகப்போவதாக செய்தி வெளியிட்டது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, சினிமாவில் நீண்ட பயணம் செய்து விட்டேன். அதனால் இந்த வேலை எனக்கு போரடித்து விட்டது. அதனால் வேறு வேலை ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். மேலும், ரசிகர்கள் போ என்று சொல்வதற்கு முன்பு நானே சென்று விடுவது மரியாதை என்று நினைக்கிறேன் என்றார் மரகதமணி.


0 comments:

Post a Comment

 
Toggle Footer
TOP